• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    Xclusive Vijay Interview in Ananda vikatan

    Wednesday, November 10, 2010

    மெல்லிய கடல் அலை சலங்கை ஒலிக்கும் நீலாங்கரை வீட்டின் கதவு தட்டினால்,
    பளிச்சென்று விஜய். "ரொம்ப நாளாச்சுல்ல விகடன்ல பேசி! தீபாவளி ஸ்பெஷல்... பேசாம இருக்க முடியுமா?" - கண்கள் மட்டும் சிரிக்கும் 'விஜய் ஸ்பெஷல்' சிரிப்பு!

    "திடீர்னு அமைதியாகிட்டீங்க. நாலைஞ்சு மாசமாச்சு உங்க குரலைக் கேட்டு. இப்போ 'காவலன்' எப்படி வந்திருக்கு?"

    "நான் ரொம்ப அப்பாவியா, வெகுளியா நடிச்ச படங்கள்லாம் நல்ல ஹிட். கொஞ்ச நாள் ரூட் மாறி ஆக்ஷன் பக்கம் போனேன். இந்த 'பாடிகார்ட்' நான் முன்னாடியே செய்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் முடியலை. இப்போ அதில் நானே இஷ்டப்பட்டு நடிக்கிறேன். படத்தின் கலகல திரைக்கதை, பாடல்கள், 20 நிமிட க்ளைமாக்ஸ் எல்லாமே மனசை அள்ளிடும். 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்' மாதிரி காதல் அதிகமா, ஆக்ஷன் குறைவா அமைஞ்ச படம். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நானும் வடிவேலுவும் அடிச்ச கூத்தை இப்போ பார்த்தாலும் சிரிப்பு வருதே. நிச்சயம் அந்த மேஜிக் இந்தப் படத்திலும் இருக்கும். அடுத்து 'வேலாயுதம்'. 'ஜெயம்' ராஜாவுக்கும் எனக்கும் அலைவரிசை சரியா இருந்தது. படத்தை நல்லபடியாக் கொண்டுவரணும்னு கவலைப்படுற அவரோட அக்கறையும் எனது விருப்பமும் ஒண்ணுதான். எல்லாம் இப்போ சரியாப் போய்ட்டு இருக்கு. பார்க்கலாம்!"
    "என்ன, ஒரு படத்தோட உங்க பையனை சினிமாவில் இருந்து நிறுத்திட்டீங்க... அவரும் 'ஜூனியர்' விஜய் ஆக சினிமாவுக்கு வருவாரா?"

    "சும்மா ஒரு டான்ஸ் ஆடிப் பார்ப்போம்னு ஆசைப்பட்டார். ஆடினார். திரும்ப அவர் படிப்பில் கவனம் ஆகிட்டார். இன்னிக்கு அவர் பிரியம் எல்லாம் கிரிக்கெட் மேலேதான். எல்லாம் சென்னை கிங்ஸ் போட்டிகள் பார்த்த எஃபெக்ட். அவுட்டோர் போயிடுறப்போ, சஞ்சய், திவ்யாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அவங்க என்னைவிடக் கஷ்டப்படுவாங்க. அதனால், என்னோட பாட்டு டி.வி-யில் வந்தா, சஞ்சய் ஆட ஆரம்பிச்சுடுவான். திவ்யா சிரிச்சுட்டே பார்ப்பாங்க. அப்படி 'பாசமலர்' பிரதர் சிஸ்டர். கொஞ்சமே கொஞ்ச நேரம் கிடைச்சாலும், அவங்களை செல்லம் கொஞ்சுவதிலேயே சரியாப் போயிருது. கண்டிப்பு டிபார்ட்மென்ட்லாம் அவங்க அம்மா சங்கீதாதான். பையன் நிச்சயம் ஒரு டிகிரியாவது படிச்சு பாஸ் ஆகணும்னு ரெண்டு பேருக்குமே ஆசை. பொண்ணுக்கு அஞ்சு வயசு. யு.கே.ஜி. போறாங்க. வீடியோ கேம்ஸ்ல அவங்களை ஒரு தடவைகூட என்னால் ஜெயிக்க முடியலை. நம் பிள்ளைங்க, நம்மளைவிட செம ஸ்பீடா இருக்காங்க. சரிக்குச் சரியா அவங்களோடு நம்மை அப்டேட் பண்ணாம இருந்தா, அவங்க நம்மைத் தாண்டிப் போயிட்டே இருப்பாங்க. நம்ம பிள்ளைங்கதானே... தாண்டட்டும்!"
    "எம்.ஜி.ஆர். சினிமாவை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு படத்திலும் அரசியல் பொடி தூவினார். உங்க படங்களில் அது இல்லையே. ஏன்?"

    "எம்.ஜி.ஆரோட காலம் வேற. மொழிப் பற்றும், திராவிடப் பாரம்பரியமும் ஊறிக்கிடந்த காலம். அப்ப அவர் சொன்ன கருத்து சரியாக இருந்தது. மக்களிடம் எடுபட்டது. இப்போ இருக்கிற இளைய தலைமுறை அரசியலை சினிமாவோடு கலக்கிறதை ஆதரிப்பாங்களானு சந்தேகமா இருக்கு. இந்த விஷயத்தில் இளைஞர்களின் எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆசையா இருக்கு. அதே சமயம் காலமும், நேரமும், இடமும், சூழலும் அனுமதிக்கும்போது, என்னை அந்த இடத்தில் கொண்டுபோய் வைக்கும்போது, நிச்சயம் சினிமாவில் என் கருத்துக்களை வைப்பேன். அப்படி செய்யத் தயங்கவும் மாட்டேன்... அஞ்சவும் மாட்டேன்!"

    "நீங்க அரசியலுக்கு வருவதுபற்றிய முடிவுக்கு வந்துவிட்டீர்களா?"

    "அது இருக்கட்டும். இப்ப ஷூட்டிங்குக்காக தமிழகத்தோட தென்கோடிக்குப் போயிருந்தேன். ஊரில் இளைஞர்களே இல்லை. எல்லோரும் சென்னைக்கோ, வெளிநாட்டுக்கோ பிழைக்கப் போயிருக்காங்க. நாம எல்லோரும் விவசாயத்தை மறந்துட்டோம். இனிமே எதிர்கால விஞ்ஞான மாற்றத்தில் எல்லாமே கிடைக்கும். பேசுற செல்போன்கூட ` 100-க்குக் கிடைக்கலாம். ஆனால், சாப்பிட அரிசி? விளை நிலங்களைத் தவிக்கவிட்டால், திரும்ப நாம தவிச்சு நிக்கும்போது, நமக்குச் சோறு போட அதுக்கு இஷ்டம் இருக்குமா? அடுத்த தலைமுறை 'விவசாயம்னா கிலோ என்ன விலை'ன்னு கேட்குமே? பெருந்தலைவர் காமராஜர் எப்பவும் கல்வியும் விவசாயமும்தான் நமக்கு வேணும்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதை நாம செய்யாம விட்டுட்டோம். எனக்கு முதலில் இளைஞர்களை விவசாயம் பக்கம் திசை திருப்ப ஏதாவது செய்யணும்னு தோணுது!"

    சைதை துரைசாமி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நீங்களும் ஜெயலலிதாவும் சந்தித்ததா சொல்றாங்களே?"

    "ஆமாம். திருமண வரவேற்பில் ஜெயலலிதா மேடத்தை எதிர்பாராத விதமாகச் சந்தித்தேன். அவங்க மணமக்களை பார்த்துத் திரும்பும்போது, நான் தம்பதியை வாழ்த்த படி ஏறிட்டு இருந்தேன். அவ்வளவு அவசரத்திலும் கூட்ட நெரிசலிலும் எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'எப்படி இருக்கீங்க?'ன்னு பாசமா விசாரிச்சாங்க. 'அம்மா, வெவ்வேற ஊர்கள்ல உங்கள் மேடைப் பேச்சு, கூடின கூட்டம் எல்லாத்தையும் டி.வி-யில் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொன்னேன். ஆர்வமாக் கேட்டுச் சிரிச்சாங்க. 'வணக்கம்' சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க. அவரை நேருக்கு நேர் நான் சந்தித்துப் பேசியது இதுதான் முதல் தடவை. அவ்வளவு கூட்ட நெருக்கடியில் இரண்டு பேருமே அதற்கு மேல் நின்று பேச முடியவில்லை!"

    "சினிமா உலகத்தை உற்றுக் கவனிக்கிறவர் நீங்க. இப்போ எப்படி இருக்கு தமிழ் சினிமா?"

    "எனக்கு ஷங்கர் சாரை நினைச்சா, பெருமையா இருக்கு. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும், யோசிக்கலாம். ஆனால், திரையில் கொண்டுவருவது... அது வேற மாதிரி பொறுப்பு. அதை எப்பவும் அருமையா செய்துட்டே இருக்கார். ஒரு தமிழனா எனக்கு சந்தோஷமா இருக்கு. அமீர் டைரக்ட் செய்த 'பருத்திவீரன்' வந்து மூணு வருஷமாகிவிட்டது. ஆனால், அந்த சினிமா இன்னும் என் மனசைவிட்டுப்போகலை. ஒவ்வொரு ஃப்ரேமும் மனசுக்குள் இருந்துக்கிட்டே இருக்கு. அமீர் இந்த மாதிரி நல்ல சினிமா செய்தால், நாம் கொண்டாடலாம். நான் கொண்டாடுறேன். அடுத்து சசிகுமார். அவர் பண்ணின படம் 'சுப்பிரமணியபுரம்'. முதல் படமே இப்படி பரபரப்பில்... சமீபத்தில் யாராவது இப்படிச் செய்து இருக்காங்களான்னு பார்த்தா, ஞாபகம் வரலை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும். என்ன... இவங்களைக் கொஞ்சம் அதிகமாப் பிடிக்கும்!"

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog